சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ல் திறப்பு!

 


சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் செப்டம்பர் 16ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. செப்டம்பர் 21 வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.


இந்நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும்.

அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கம்.

கொரோனா காரணமாக தினமும் 15000 பக்தர்கள் வரை மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியுள்ளது.

பதிவு செய்த பக்கர்கள் தரிசனத்திற்கு வரும் போது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இதில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.நிலக்கல்லில் இதுகுறித்து ஆய்வுக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.