சபரிமலையில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறப்பு.. ஆக.21 வரை தரிசனம்!
Aug 18, 2026, 06:10 IST
சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் ஆவணி மாத பூஜைக்காக தலைமைத் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்து தீபாராதனை காட்டினார்.
ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஆவணி மாதத்திற்கான சிறப்பு மாதாந்திர பூஜைகள், வழிபாடுகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பூஜைகளும் நிறைவுற்று ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும்.
ஆவணி மாத பூஜைகளில் பங்கேற்று அய்யப்பனை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளில் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.