பிரபல ஆர்ஜே அனன்யா மரணம்..! கொலையா? தற்கொலையா? போலீஸ் தீவிர விசாரணை!

 

கேரளாவில் ரேடியோவில் பணிபுரிந்து வரும் பிரபல ஆர்.ஜேக்களில் குறிப்பிடத்தகுந்தவர் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி அனன்யா குமாரி அலெக்ஸ். இவர் கொச்சியில் உள்ள அவருடைய குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகிறது.
திருநங்கையான இவர் கேரளாவில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர். ஆனால், இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தபடவில்லை எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தனது சிகிச்சை பதிவுகளை கொடுக்க மறுத்து வருவதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தார். அவர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ என்னால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. தும்மும் போது, சிரிக்கும் போது அல்லது பல் துலக்கும் போது கூட கடுமையான சுவாச சிரமங்களையும் அனுபவித்து வருகிறேன்.
பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சையில் எனது தனிப்பட்ட பகுதி கத்தியால் இரக்கமின்றி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவ அலட்சியத்தின் பலியாக நிற்கிறேன். அறுவைச் சிகிச்சைக்கு பிறகு என் பிறப்புறுப்பு பகுதியில் கடுமையான வலி உள்ளது. இது விவரிக்க முடியாது. சில நேரங்களில் என்னால் உட்கார கூட முடிவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அனன்யா மரணம் குறித்து , “இது ஒரு தற்கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது, பிரேத பரிசோதனை செய்து அதன் முடிவுகள் வந்த பின்னரே கூடுதல் விவரங்களை கூற முடியும்” என கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.