வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

தமிழகத்தில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திரைப்பட படப்பிடிப்புக்கள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகை பொறுத்தவரை தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திரைப் படங்களுக்கு விலக்கு அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும், மனுதாரரின் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் வரி விலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வணிக வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தக் குழுவில் ஆளும் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இது போன்று பாகுபாடு காட்டுதல், ஒரு சார்பு நிலையெடுத்தல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இது போன்ற குழுக்களை அமைக்கும்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடைமுறைகள் இருந்தால் அதனை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அலுவலர்கள் பாகுபாடு காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்று நிபுணர் குழுவை நியமிக்கும்போது உரிய தகுதி அடிப்படையில் பெண்களும், ஆண்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டு வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு, பாரபட்சம் இல்லாத ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்ய, குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றியமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.