திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

 


இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால், தியேட்டர்கள் கடுமையான பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளன.

இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓடிடி-க்கு இடையே பலத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்ட போது தொடங்கியது.

அப்போதே இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சூர்யா நடிப்பில் வெளியாகும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என நிபந்தனை விதித்தனர்.


தற்போது, ஓடிடி-யில் வெளியான படங்களை திரையிடுவதில்லை எனத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தியேட்டரில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடி மூலம் வெளியிடப்படும் படங்கள் மட்டுமே திரையிட ஒப்பந்தம் செய்யப்படும். ஓடிடி விற்பனைக்கான முன்னோட்ட காட்சிகளும் திரையரங்குகளில் இடம் பெறாது எனவும், ஓடிடி-க்கு தனி படங்களைத் தயாரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.