அதிர்ச்சி! பிரபல பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் காலமானார்!

 

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்களில் பிறைசூடன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.


இவர் இதுவரை 400 திரைப்படங்களில் 1,400க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அத்துடன் சுமார் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் , கபிலர் விருதையும் பெற்றுள்ளார். இவர் சில காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பிறைசூடன் நெசப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் உறுதி செய்துள்ளார்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளார்.

இவரது படைப்பில் வெளிவந்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அதிசயப் பிறவி, கேளடி கண்மணி, இதயம் படப்பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இவரது மறைவிற்கு திரைத்துறையைச் சார்ந்த நண்பர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.