குடும்பத் தகராறால் பரிதாபம்! தாயே குழந்தைகளை கொலை செய்த கொடூரம்!

 


புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா . இவர்களுக்கு ஸ்ரீசந்த் (4), விஷ்ணு (2) என்ற இரு குழந்தைகள் . பிரியாவும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.


இந்நிலையில் வழக்கம் போல் இரவு கணவருடன் பிரியா மொபைல் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறில், தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து விட்டு கணவருக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் . உடனடியாக வெளிநாட்டில் இருந்து பாலமுருகன், தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


பாலமுருகனின் சகோதரர் விரைந்து வந்து, வீட்டில் மயங்கிக் கிடந்த மூவரையும் காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து பிரியா தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து திருநள்ளாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.