சாலையில் போடப்பட்ட அசாம் பயணி உடல்- சென்னையில் அதிர்ச்சி..!
சென்னை பல்லாவரத்தில் கட்டிடத் தொழில் செய்து வந்தவர் தீபக் பால். ஆசாம் மாநிலத்தைச் சேந்த இவர் இரண்டாண்டுகளாக சென்னையில் உள்ளார். நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார்.
பயணிகள் காத்திருப்பு பகுதியில் தீபக் பால் இருந்த போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானநிலைய அதிகாரிகள் அவரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் தேறினார்.
இதையடுத்து இன்று காலை மீண்டும் விமான நிலையம் வந்து ஊருக்கு செல்ல இருந்தார். அப்போது மறுபடியும் தீபக் பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போதே, அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் விமான நிலையத்துக்கு அவருடைய உடல் கொண்டு வரப்பட்டது.
சென்னை உள் நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டது. அவருடைய உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்தனர். எனினும் சுமார் அரைமணிநேரம் அவருடைய உடல் மழையில் நனைந்தபடி கிடந்தது.
இது சக பயணிகளை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்தது. விமானத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் மீனம்பாக்கம் காவல் துறை தீபக் பால் உடலை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து அவருடைய உடல் பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.