பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை!! 144 தடை உத்தரவு!! மாவட்டம் முழுவதும் பதற்றம்!!

 

பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காரைக்கால் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தேவமணி (53) என்பவர், திருநள்ளார் பிரதான சாலை சுரக்குடி சந்திப்பு அருகே வசித்து வந்தார்.

அவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10.20 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து அவர் தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென தேவமணியை வழிமறித்து, சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயமடைந்த தேவமணியை அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தேவமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.