சென்னையில் 3 நாட்களில் ரூ.6.43 லட்சம் அபராதம்!

 

சென்னை மாநகராட்சியில் 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது !

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதாக மாநகராட்சிக்கு வந்த புகாரின் அடிப்படையிலும், சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலான 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 பேரிடம் இருந்து ரூ.3,19,200 அபராதமும், பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 123 பேரிடம் இருந்து ரூ.3,24,300 அபராதம் என மொத்தம் ரூ. 6,43,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.