முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தி.. பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதிக்க வேண்டும்

 

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்..

முல்லைப்பெரியாற்று அணையின் ஒரு பகுதியான பேபி அணையை வலுப்படுத்துவதற்காக அதற்கு அருகில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை கேரள அரசு ரத்து செய்திருக்கிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது; கண்டிக்கத்தக்கது!

முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என 2006-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு 2014-ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அணையை இன்னும் வலுப்படுத்த முடியாததற்கு அங்குள்ள மரங்கள் தான் காரணம்!

பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு கடந்த ஆண்டே ஆணையிட்டும், அனுமதி வழங்க கேரள அரசு மறுப்பது நியாயமல்ல. இது அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுப்பதற்கான சதி!

பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்க கேரள அரசு மறுத்தால், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும்!