இறந்த தாத்தாவை ஃபிரிட்ஜுக்குள் வைத்த பேரன்! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

 

இறந்து போன தன் தாத்தாவின் சடலத்தை, வீட்டிலிருக்கும் ப்ரிட்ஜூக்குள் வைத்த பேரனை, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் பாலய்யா. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். ஓய்வூதியம் வாங்கி வருகிறார். இவரும், இவரது பேரன் நிகிலும், அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், பாலய்யா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், பாலய்யா வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டனர். வீட்டிற்குள் சோதனை செய்த போது, வீட்டிலிருந்த ஃபிரிட்ஜை திறந்து பார்த்த போலீசார், ஃப்ரிட்ஜூக்குள் பாலய்யாவின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பேரன் நிகிலிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த 3 நாட்களுக்கு முன்பே தன் தாத்தா பாலய்யா உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் என்று நிகில் கூறினார். தனது தாத்தாவுக்கு இறுதிச் சடங்கு செய்யப் தன்னிடம் பணம் இல்லாததால், அவரது உடலை ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார், பாலய்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓய்வூதியம் நின்று விடும் என்பதற்காக பாலய்யா இறந்ததை, நிகில் மறைத்தாரா என்கிற கோணத்திலும் போலீசார் நிகிலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.