குறும்பு செய்த 5 வயது சிறுவனை அடித்தே கொலை செய்த இளம்பெண்!

 

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் 2வது ரயில்வே ஸ்டேஷன் தெருவில் வசித்து வருபவர் 35 வயதான தியாகராஜன். இவருடைய மனைவி 30 வயதான சூசை மேரி . இவர்களுக்கு 4 குழந்தைகள்.இவர்கள் சின்னஞ்சிறு குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் சூசை மேரி வேலைக்கு செல்வதாலும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் 8 வயது மகள் கீர்த்தி, 5 வயது மகன் ஆபேலையும் சூசைமேரியின் சகோதரி டார்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களது வீடு தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காமராஜர் நகர், எம்.ஜி.ஆர்.தெருவில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டார்த்தி இறந்துவிட்டதால் டார்த்தியின் 20 வயதான மகள் மேரி இந்த 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார்.

இரவு ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் ஏற்கனவே இறந்து விட்டான் என அவனை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.


உயிரிழந்த சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் போன்ற காயங்கள் இருந்தது. இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறுமி கீர்த்தியிடம் விசாரணை செய்தனர்.


அப்போது மேரி, அடிக்கடி தனது தம்பி ஆபேலை அடிப்பதுடன், சூடும் வைப்பார் என தெரிவித்துள்ளார். சிறுவன் அதிகமாக குறும்புத்தனத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் அவனை அடிக்கடி கையால் அடித்தும், சூடு வைத்ததாகவும், இரவு குறும்பு அதிகமானதால் சிறுவனை பிடித்து சுவரில் தள்ளியதாகவும், இதனால் சுவரில் மோதி மயங்கி விழுந்த ஆபேல் உயிரிழந்ததாகவும் மேரி வாக்குமூலம் அளித்தார். மேரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.