ஜாலி! விரைவில் சென்னை காரைக்கால் பயணிகள் படகு சேவை!

 

சென்னை துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள் சமீப காலமாக தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த சேவைக்காக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டு ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள சிறு, சிறு துறைமுகங்கள் அதிகமுள்ளதால் இந்த படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணம் செய்யும் படகு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடல் வழி பயணத்தில் இயற்கை அழகையும் கடற்கரையோர நகரங்களை ரம்மியமாக ரசித்தவாறு படகுப் போக்குவரத்து அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.

இதற்காக சென்னை, காரைக்கால் துறைமுகங்களுக்கு இடையே உள்ள சிறு துறைமுகங்களை அழகுபடுத்தும் பணியும் ஆழப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. பயணிகளிடம் இருந்து படகு போக்குவரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற கடற்கரை நகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.