மனைவியின் காதை அறுத்துக் கொண்டு கம்மலோடு ஓடிய கணவன்! தள்ளாடும் தமிழகம்!

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி. இதில் பாலசுப்பிரமணி மது போதைக்கு அடிமை. தினமும் அவரது மனைவி தங்கமணியை மிரட்டி பணம் வாங்கி குடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதுபோல் மனைவியை மிரட்டி பணம் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை என்று தங்கமணி சொல்லவும், குடிக்காமல் என்னால் இருக்க முடியாது என்று சண்டை போட்டிருக்கிறார் பாலசுப்பிரமணி.

என்னிடம் பணம் எதுவும் இல்லை; குடிக்கிறதை நிறுத்தி விட்டு நல்ல மனுசனா இருக்குறத பாருங்க என்று அறிவுரை கூறி கொண்டிருக்கும் போது ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி, மனைவி அசந்த நேரம் பார்த்து அவருடைய காதை அறுத்து அதிலிருந்த கம்மலை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். வலியால் துடித்த தங்கமணி, வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு ரத்தம் சொட்டச் சொட்ட வந்து புகார் கொடுத்தார். அவரின் நிலையை கண்டு பரிதாபமடைந்த போலீசார், முதலில் நீ ஆஸ்பத்திரிக்கு போம்மா… அப்புறம் வந்து புகார் கொடுக்கலாம் என்று சொல்லி, சிகிச்சைக்காக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே இது போன்ற குற்றங்கள் அதீத போதையில் மீண்டும் அதிகமாகி வருகின்றன.