தாயை கத்தியால் குத்தியதால் தந்தையை அடித்தே கொன்ற மகன்கள்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

 

வத்தலக்குண்டு அருகே தாயை கத்தியால் குத்திய தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செங்கட்டாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வனராஜ் (55). கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவி ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஆத்திரத்தில் சண்டையிட்டு, அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் முத்துசாமி, ஊர்காலன் ஆகியோர் ஓடிவந்து பார்த்த போது தங்களது தந்தை கையில் கத்தியுடனும், தாய் ரத்த வெள்ளத்தில் கீழே வலியால் சுருண்டு விழுந்திருப்பதையும் பார்த்து, அதிர்ச்சியடைந்தனர். பின் இருவரும் சேர்ந்து தந்தை வனராஜை அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்துள்ளனர். இதில் வனராஜ் படுகாயமடைந்தார்
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கணவன் மனைவி இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஈஸ்வரி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலத்த காயமடைந்த வனராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மகன்கள் முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.