இன்று சட்டசபையில் கவர்னர் உரை! வெளியாகும் முக்கிய அறிவிப்புக்கள்!

 

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கப்பட இருக்கிறது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கவர்னர் உரையுடன் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்க இருக்கிறது.

சபாநாயகர் அப்பாவு கவர்னரை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். கவர்னர் உரை ஆங்கிலத்தில் வாசித்து முடித்ததும் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார்.


அதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறலாம்.

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு, மேகதாது அணை விவகாரம், அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகை போன்ற பல்வேறு தகவல்கள் ஆளுநர் உரையில் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் நாளை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியும், துணைத் தலைவராக ஓபிஎஸ் சும் முதல் முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கின்றனர். அ.தி.மு.க. அரசின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிப்பார்கள் என்பதால் அமைச்சர்களுடன் காரசார விவாதம் நடைபெறலாம்.
தற்போது கொரோனா பரவலை அடுத்து சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே 2 நாட்களாக கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நெகட்டிவ் முடிவுகள் வந்தவர்கள் மட்டுமே சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.