பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

 


கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் . இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவருக்கு வயது 23 . நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர்.

உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.இவர்களுடன் ஆம்புலன்சில் டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகியோரும் ஆம்புலன்சில் பயணம் செய்தனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

மரத்தின் மீது அதிவேகமாக மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த எஞ்சிய 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஜெயலெட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரசவத்திற்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.