பெற்ற மகனை அடகு வைத்த கொடூர தந்தை!

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பஜாரில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ரூபேஷ் என்ற மகனும், ஹர்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.
இவர் அவருடைய தந்தையுடன் பரமக்குடி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே மனைவி சரண்யாவின் 90 சவரன் நகைகளை விற்று தொழிலை தொடங்கினார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே, மேலும், மேலும் கடன் வாங்கினார்.


கடன் கொடுத்தவர்கள் ரமேஷுக்கு நெருக்கடி கொடுத்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டதால் மகன் ரூபேஷை கடன்காரர்களிடம் காலையில் ஒப்படைத்து விட்டு, அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை கடன்காரரிடம் செலுத்திய பிறகு மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரமேஷ், சரண்யாவை வீட்டிலிருந்து வெளியே விரட்டினார். இதையடுத்து சரண்யா தனது மகன் மற்றும் சகோதரருடன் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சரண்யா தெரிவிக்கையில் “கடன் கொடுத்தவர்களிடம் எனது மகனை அடமானம் வைக்கிறார். எனது கணவர் வீட்டார் என்னையும், குழந்தைகளையும் விரட்டி விட்டனர். எனது கணவர் மற்றும் கடன் கொடுத்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.