100 ஏக்கர் நிலம்! 44 வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை! போலீசாரிடம் சிக்கிய தம்பதி!

 

கடந்த 44 ஆண்டுகளாக தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவன், மனைவி உட்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

சேலம், வத்தியூரைச் சேர்ந்தவர் ஞானம்மாள். இவருக்கு அந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதில், 18 ஏக்கர் நிலத்தை 1977ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பழனியப்பனுக்கு விற்றதாக தெரிகிறது. பின்னர் பழனியப்பனுக்கு விற்பனை செய்த அதே 18 ஏக்கர் நிலத்தை ஞானம்மாள் வேறு ஒருவருக்கும் விற்றதாக புகார் எழுந்தது.

ஒரே நிலத்தை இருவருக்கு விற்பனை செய்ததால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஞானம்மாள், வெளியூரில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து பழனியப்பன் தரப்பை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பழனியப்பன், 1977ம் ஆண்டே தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கிருஷ்ணன், சுப்பிரமணி, அவரது மனைவி அலமேலு உள்பட 16 பேர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த பிரச்சனைக் குறித்து நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையை கிருஷ்ணன், சுப்பிரமணி, அலமேலு ஆகியோரை தவிர மற்ற அனைவரும் முடித்துக் கொண்டனர். ஆனால், இவர்கள் 3 பேர் மட்டும் வழக்கை முடிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளனர். பிடிவாரண்டு பிறப்பித்தும், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போதும், போலீசாரிடம் சிக்காமல் இத்தனை வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூவர் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கிருஷ்ணன், சுப்பிரமணி, அலமேலு ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.