மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனைஅடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வீடு, வீடாக மாநகராட்சி ஊழியர்கள் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

அதன்படி அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் மற்றும் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்றவை குறித்தும் கணக்கெடுத்து வருகிறார்கள்.

அப்போது காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றனர். இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் சேலத்தில் மட்டும் எத்தனை பேர் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடையவர்கள், கொரோனா பாதிப்புடையவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்