கட்டுப்பாட்டை இழந்த லாரி! மோட்டார் சைக்கிள் மீது மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி!

 

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள வாசுதேவநல்லூர் நாரணம்மாள்புரம் பஞ்சாயத்து கூடம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் திருமலைசாமி . இவருடைய மகன் சுரேஷ். இவருக்கு வயது 34. இவர் மஸ்கட் நாட்டில் வேலை பார்த்து விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சொக்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மோட்டார்சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கிலிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.


எதிரில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் வசித்து வரும் முத்துராமலிங்கம் மினி லாரியில் கடையநல்லூருக்கு ஆடுகளை ஏற்றி வந்தார். எதிர்பாராத விதமாக சுரேஷ் மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


காவல்துறையினர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த சுரேசுக்கு திருமணம் முடிந்து 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.