தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை! ஆர்.டி.ஓ. விசாரணை!

 

தேனி மாவட்டம் ஆன்டிப்பட்டியில் அமைந்துள்ள தர்மத்துபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மகள் சௌந்தர்யாவை பெரியகுளத்தின் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாந்துராஜ் என்பவருக்கு 2018ல் திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 1½ வயதில் விஷ்வந்த்ராஜ் என்ற மகன் இருக்கிறான்.

நிஷாந்துராஜ் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சௌந்தர்யா கோபித்துக் கொண்டு தர்மத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

ஏற்கனவே மனவருத்தத்தில் இருந்த சௌந்தர்யா வீட்டின் மாடியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர சௌந்தர்யாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.