திருச்சியில் தொடரும் கடத்தல்! ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

 

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அதில் 3 பயணிகள் சந்தேகத்துடன் காணப்பட்டதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை செய்தனர்.

இதனையடுத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான ஆறுமுகத்திடம் 1.5 கிலோ தங்கத்தை எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.73 லட்சம் ஆகும்.

இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த 32 வயதான ஷேக் தாவூத்தும் 575 கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.2 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.