தொடரும் சோகம்! மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு பலி!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது .இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார் விருதுநகர் மாவட்டம் பாவலி சந்திரகிரிபுரத்தை சேர்ந்த நாராயணசாமி.இவருக்கு வயது 32. சிறை வளாகத்தில் அமைந்துள்ள தெற்கு காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நாராயணசாமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மே 29ல் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆக்சிஜன் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மத்திய சிறையில் சமீபத்தில் கைதிகள் மற்றும் காவலர்கள் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 213 சிறைக்காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.