திருப்பூரில் பயங்கர தீ விபத்து!

 

திருப்பூரின் மையப்பகுதியில் கோர்ட்டு ரோடு வாலிபாளையம் அமைந்துள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே இடத்தில் உணவகம், சூப்பர் மார்க்கெட், உடற்பயிற்சி நிலையம், ஆண்களுக்கான அழகு நிலையம் என பல்வேறு கடைகள் உள்ளன.

வணிக வளாகத்தின் முதல்மாடியில் உள்ள ஆண் அழகுநிலையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அங்கு தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். பின்னர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக போராடி தீயை அணைத்தனர்.

இதனால் தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்க முடிந்தது. உடனடியாக ஆட்கள் வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்தில் அழகு நிலையத்தில் இருந்த விலையுயர்ந்த அழகு சாதனங்கள்,சேர்கள், ஷோபாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானதாக அழகு நிலைய நிறுவனர் தெரிவித்துள்ளார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.