கவர்மெண்ட் வேலை கிடைக்கும்! 18 பேரிடம் ரூ10,00,000/ ஏமாற்றி மோசடி!

 

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். இவரது மகன் பார்த்தசாரதி . இவருக்கு வயது 21. இவர் தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.

திருவள்ளூரில் திருப்பாச்சூர் காலனியில் வசித்து வருபவர் அரவிந்தன் . இவருக்கு வயது 25. சில நாட்கள் கழித்து பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு எழுத்துத் தேர்வில் தேறவில்லை எனத் தெரிவித்துள்ளார். தனக்கு எப்படியாவது வேலை வாங்கி தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ரூ.5,00,000/- தனக்கு கொடுத்தால் உடனடியாக பணி நியமன ஆணை பெற்று தருவதாகத் தெரிவித்துள்ளார். பார்த்தசாரதி அவரிடம் ரூ.4,67,207/- கொடுத்துள்ளார். அரவிந்தன் சில நாட்களுக்கு முன்பு பார்த்தசாரதிக்கு போலியான பணி நியமன ஆணையை தயார் செய்து கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவான அரவிந்தனை தேடிவந்த நிலையில் திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் 2020ல் தமிழக ஊர்க்காவல் படையில் பணிக்கு சேர விண்ணப்பித்ததாகவும், அது சம்பந்தமாக அலுவலக ஊழியர்கள் சில பேரிடம் பழக்கம் ஏற்பட்டதும், அப்பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தவறான வழியில் பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக 18 பேரை ஏமாற்றியிருப்பதும் இந்த வகையில் அவர் ரூ.10,00,000/-க்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.