ஏன் பிள்ளையாரை வணங்கும் போது தலையில் குட்டிக் கொள்கிறோம் தெரியுமா?
ஏன் பிள்ளையாரை வணங்கும் போது தலையில் குட்டிக் கொள்கிறோம் தெரியுமா? அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள கு ஒரு புராண கதையைப் பார்ப்போம். முழு முதற் கடவுள் பிள்ளையார் தான். அவரை வழிபடும் போது தலையில் குட்டிக் கொள்கிறோம் . ஏன் எனத் தெரியுமா?அனைவருமே குட்டிக் கொள்கிறார்கள் அதனால் நாமும் அதையே செய்கிறோம். இந்த விநாயகர் சதுர்த்தி நாள் முதல் பொருள் தெரிந்து விநாயகரின் பெருமைகள் அறிந்து வழிபடத் தொடங்குவோம்.அவன் அருள் பெறுவோம்.
கர்நாடகா , தமிழகத்தின் பல மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி ஆறு.இதனை கரைபுரண்டு ஓட வழிவகை செய்தவர் விநாயகர் தான் என்கின்றன புராணங்கள்.
ஒரு முறை சுர்வதமன் என்ற அரக்கன் கடுமையான தவத்தினால் சிவபெருமானிடம் தொட்டதெல்லாம் வெற்றி என்னும் வரத்தை பெற்றான். அதன் பின் அவன் உலகையே ஆட்டிப்படைக்க ஆரம்பித்தான். தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனிடம் சிக்காமல் இந்திரனும், வருணனும் தப்பிச் சென்று விட்டனர். இந்திரனை சிறைபிடிக்க வானில் பறந்து கொண்டிருந்த வருணனை பிடித்து உன்னை சிறையில் அடைக்காமல் இருக்க அவனை நீ பிடித்து தர வேண்டும் என கட்டளையிட்டான். தென் இந்தியாவில் தான் இந்திரன் ஒளிந்து கொண்டிருந்தான். வருணனை அங்கே மழை பொழிவதை அடியோடு நிறுத்தினால் இந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைப்பார்கள் எனவும் ஆலோசனை கூறினான்.
இதனால் நீரின்றி தென்பகுதி பாலைவனமானது. அகத்தியர், பிரம்மனிடம் தென் பகுதியை வளமாக்க வேண்டினார். பிரம்மாவோ, சிவனை நாடுங்கள் எனத் தெரிவித்தார். சிவனை வேண்டிய அகத்தியருக்கு சிவ பெருமான் தன் தலையிருந்து செல்லும் கங்கையின் ஒரு பகுதியை அகத்தியருக்கு கொடுத்தார். அதை கமண்டலத்தில் அடைத்து தென் பகுதிக்கு எடுத்து வந்தார். விநாயகர் அந்த சமயம் மூஷிக வாகனத்தில் அகத்தியரை பின் தொடர்ந்தார். அகத்தியர் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு வறண்டு போன இடங்களைப் பார்த்து சோகத்தில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த பிள்ளையார், காகமாக உருவெடுத்து, கமண்டலத்தில் உள்ள தண்ணீரைக் கீழே தள்ளினார். அகத்தியர், காகத்திற்கு சாபம் வழங்க முற்படுகையில் சொந்த உருவத்திற்கு திரும்பிய பிள்ளையாரைப் பார்த்தவுடன் வணங்கினார். விநாயகர் காகமாக மாறி நீரை விரித்ததால் (பரப்பியதால்), காவிரி என பெயர் பெறட்டும் என வாழ்த்தினார் அகத்தியர்.
கமண்டலத்தைத் தட்டி விட்டதால், தலையில் குட்டப் போய், விநாயகரை கண்டதும் அகத்தியர் தன் தலையில் தானே குட்டு வைத்துக் கொண்டார் அகத்தியர். அதிலிருந்து தான் கணபதியை வணங்கும் போதெல்லாம் தலையில் குட்டிக் கொள்கிறோம்.இப்படி தலையில் குட்டி வழிபடுவதால் நமது ஆணவமும், அகந்தையும் அழிந்துவிடுவதாக ஐதீகம்.