துணிகரம்! ஓடும் பேருந்தில் ரூ 3,00,000/- நகை, பணம் கொள்ளை!

 

சென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் நந்தா . இவரது மனைவி ராதா. இவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கண்டாச்சிபுரத்தை அடுத்த கடையம் கிராமத்திற்கு சென்றிருந்தார்.
தாய் தந்தையை பார்த்து விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக ராதா, கடையம் கிராமத்திலிருந்து அரசு பேருந்தில் விழுப்புரம் புறப்பட்டார்.

அந்த சமயத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 ½ பவுன் நகையை கழற்றி பாதுகாப்பாக ஒரு மணிபர்சில் வைத்துக் கொண்டார். விழுப்புரம் வந்ததும் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு ராதா, பேருந்திலிருந்து கீழே இறங்கியதும் மணிபர்ஸ் வைத்திருந்த துணிப்பையை பார்த்தார். அப்போது அந்த பையினுள் இருந்த மணிபர்சில் வைத்திருந்த நகை மற்றும் ரூ.11,500 ரொக்கம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


பேருந்தில் பயணம் செய்த யாரோ ஒருவர் தான் அவருடைய பையிலிருந்த நகை- பணத்தை அபேஸ் செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.