விருதுநகரில் பரபரப்பு! குடிதண்ணீருக்காக காலிக்குடங்களுடன் சாலை மறியல்!

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியை சேர்ந்த எம்.எஸ்.ஆர். காலனி, முத்தரையர் நகர் பகுதிகள். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அருப்புக்கோட்டையை அடுத்த பாளையம் பட்டியிலிருந்து நான்கு வழிச்சாலை வரை புதிதாக சாலை விரிவாக்க பணி நடைபெற்றது .

அந்த சமயத்தில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதனால் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 6 மாதகாலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் குடிநீர் வழங்காதது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் நான்கு வழிக்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.
தகவல்அறிந்த சப்-இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.உடனடியாக ஒரு சில நாட்களில் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.