பிரதமர் மோடி தொடர்பான வீடியோ.. நீக்கியது யூடியூப் !

 

பிரதமர் மோடியின் செல்வாக்கு சர்வதேச அளவில் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் இந்தியாவின் தன்மை மாறிக்கொண்டே செல்கிறது என்றே கூறலாம். எனினும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட கலவரம் அவரை பின்தொடர்ந்துகொண்டே செல்கிறது. கலவரத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த வழக்கில் இருந்து பிரதமர் மோடி நீதிமன்றத்தில் வென்றாலும் அவர் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் மட்டும் ஓய்யவில்லை. அந்த வகையில், கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இடையிலான பதற்றத்தை பாருங்கள் எனவும் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதையும் இந்த ஆவணப்படம் வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

``India: The Modi Question" என்ற இரண்டு பாகங்கள் கொண்ட அந்த ஆவணப்படத்தைக் கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி பேசியபோது, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். ஒரு சார்பான ஆவணப்படம், காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல எனவும் கடுமையாக சாடினார்.

இந்த ஆவணப்படங்களை இந்தியாவில் ஒளிபரப்ப முடியாது என அவர் கூறிய நிலையில், யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.