கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்! கனமழையால் பயத்தில் மக்கள்!

 

கேரளாவுக்கு மீண்டும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி நீடித்து வருவதால் அக்டோபர் 26 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் எனவும், இடி மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும், நாளை அக்24ம் தேதி கோட்டயம், இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அணை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுதவிர இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த காலகட்டத்தில் கேரளாவில் சராசரியாக 192.7 மி.மீ அளவு மழைப்பதிவு இருக்கும். ஆனால் தற்போதைய நிலவரப்படி இதுவரை 453.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.