கருப்பு பூஞ்சை நோய்: அதிக உயிரிழப்பு பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடம், 3வது இடத்தில் தமிழகம்

 

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை அடுத்து கருப்பு, வெள்ளை, மஞ்சள் என விதவிதமான வண்ணங்களில் பூஞ்சை நோயும் பரவி வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. அனில் அகர்வாலுக்கு மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுதியுள்ள கடிதத்தில், மகாராஷ்டிராவில் 1,129 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை 2,813 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளார். இந்த பட்டியலில், மகாராஷ்டிராவிற்கு அடுத்து குஜராத் (656) 2வது இடமும், தமிழகம் (334) 3வது இடமும், கர்நாடகா (310) 4 வது இடமும் வகிக்கின்றன.