மும்பை கனமழை: பலி 25 அக உயர்வு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மும்பையில் பலத்த மழை காரணமாக அனைத்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கனமழை காரணமாக மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25 அக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக செம்பூர் மற்றும் விக்ரோலியில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இறந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி தேசிய நிவாரணத்திலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.