கேரளாவுக்கு, தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்

 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்தும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்திருக்கின்றன.

இந்நிலையில் திமுக வெளியிட்டுள்ள செய்தியில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் தி.மு.க. அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை தி.மு.க. அறக்கட்டளை தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இப்பெரு வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் தி.மு.க. தெரிவித்து கொள்கிறது.