இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

மத்தியப் பிரதேசத்தில் நிமச்-ரத்லம் ரயில்வே வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டு செலவு ரூ. 1,095.88 கோடி. இத்திட்டத்தை நிறைவு செய்யும் போது இதன் செலவு ரூ. 1,184.67 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 132.92 கி.மீ தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இத்திட்டம் 4 ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த வழித்தடத்தில் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்தும் அதிகரிக்கும். உன்சாகர் கோட்டை முதல் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும், இந்த வழித்தடத்தில் உள்ளன. இதனால் இத்திட்டம் சுற்றுலாத்துறையையும் ஊக்குவித்து, பயணிகள் ரயில் போக்குவரத்தையும் அதிகரிக்கும்.