தடுப்பூசி கையிருப்பு தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது! மத்திய அரசு உத்தரவு!

 


மத்திய அரசே மாநில அரசுகளுக்கான தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகள் தங்களிடம் உள்ள அனைத்து தடுப்பூசிகளின் கையிருப்பு மற்றும் அவற்றின் விநியோகம் குறித்த தகவல்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.மேலும் இந்தியாவில் செயல்படும் மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு இவின் – eVIN என்ற முறையும் தடுப்பூசி பற்றிய அப்டேட்களுக்கு பயன்படுத்தப்படும்.

இதில் நாடு முதல் மாவட்டம் வரையில் அனைத்து மட்டத்திலும் உள்ள தடுப்பூசி கையிருப்பு, அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தட்பவெப்பநிலை போன்ற தரவுகள் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இவின் இணையதள பக்கத்தில் உள்ள அனைத்து தரவுகளையும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இந்த தரவுகள் மாநில அரசுகளால் தினசரி அப்டேட் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இணையதள பக்கத்தில் பதிவிடப்படும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு, விநியோக தரவுகளை மாநில அரசுகள் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி வேறு எந்த அமைப்புடனோ, ஊடகத்திடமோ, இணையதளத்திலோ, பொதுவெளியிலோ வெளியிடக்கூடாது’ எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு அளவு தரவுகளை தனியார் அமைப்புகள்\நிறுவனங்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.