திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

 

இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் அனைத்து மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 8000 பேருக்கு இலவச தரிசனத்திற்கான சடிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், தரிசன நேரம் இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள திருப்பதி உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இருந்தே மே 5 முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதுமுதல் 300 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவு தரிசனம் மட்டும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இத்துடன் கல்யாண உற்சவ டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் இவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டிக்கெட்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இருந்த போதிலும் ரூ.1,000 கட்டணம் செலுத்தி நடப்பாண்டிற்குள் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.300 கட்டண தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பயணங்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இன்று முதல் திருப்பதியில் சுமார் 8000 பேருக்கு முதல் கட்டமாக அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்ட்டுள்ளது. இவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்து ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இலவச டிக்கட்டுகள் தினமும் காலை 6 மணி முதல் திருப்பதி சினிவாசம் ஓய்வறையில் கிடைக்கும்.