தமிழகத்தில் முதல் நாள் இரவுநேர ஊரடங்கு இப்படித்தான் இருந்தது!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் இரவு ஊரடங்கு நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகள், பால், மருந்து விநியோகத்துக்கு மட்டுமே அனுமதி .

பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. அதே போல் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்லவும் அனுமதியில்லை. பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இதனால் அனைத்து சாலைகளும்,மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நேற்று தமிழகம் முழுவதும் 9 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசியத் தேவைகளுக்கு வாகனங்கள் சென்ற. அதேபோன்று பணிகளுக்கு சென்றவர்கள் அடையாள அட்டை மற்றும் நிறுவனம் வழங்கிய கடிதங்களை காவல்துறையினர் பரிசோதித்த பின்னரே அனுமதித்தனர்.

அதிகாலை 4 மணிக்கு முதல்நாள் இரவு நேர ஊரடங்கு முடிந்து வழக்கம் போல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. அதே போல் இன்று காலையிலேயே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.