மத்திய அரசின் திட்டத்தில் 10,185 வரத்துக் கால்வாய்கள், 809 ஏரிகள் புனரமைப்பு - தமிழகத்தில் நாளை பணிகள் தொடக்கம்!
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு புனரமைப்புப் பணிகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.
மத்திய அரசின் 'விகசித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமீன்)' திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களுக்கு மொத்தம் ரூ.507.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், விவசாயப் பாசனத்தை மேம்படுத்தவும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.116.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளிட்டவை தூர்வாரப்பட்டுப் புனரமைக்கப்படவுள்ளன.
மழைக் காலங்களில் வீணாகும் நீர்நிலைகளைச் சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இப்புனரமைப்புப் பணிகள் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.