சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 16 முதியவர்கள் பலியான சோகம்!
தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள முதியோர் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட கோர தீ விபத்தில் 16 முதியவர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் மொத்தம் 26 முதியவர்கள் தங்கி வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் இந்த முதியோர் இல்லத்தில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவெனப் பற்றிய தீ அனைத்து அறைகளுக்கும் பரவியதால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது. இக்கோர விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்ததுடன், எஞ்சிய 10 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்; காயமடைந்த அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.