17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது !!

 

17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

திருச்சி கோட்டை கீழ ஆண்டார் வீதி பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(27). பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்தார். தற்போது கட்சி பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தும் இவருக்கு, பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்.

பின்னர் அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் செல்போன்களை பகிர்ந்து பேச தொடங்கினர். அதன்பின், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அந்த மாணவியை வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இத்தொடர்பாக அந்த சிறுமி வினோத்திடம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

தொடர்ந்து தவறான நோக்கத்தில் பழகியதால், பள்ளி மாணவி இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரைத்தது.


இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வினோத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பது தெரியவந்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.