மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி.! வயலில் நடவு பணிக்காக சென்ற போது நேர்ந்த சோகம்!!

 

வயலில் நடவு பணிக்காக சென்ற இரு பெண்கள் மின்னல் தாக்கி   உயிரிழந்த சோக சம்பவம் கள்ளக்குறிச்சி நிகழ்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் நேற்று மதியம் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெத்தானூரை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி உமா ,ராமர் என்பவரது மனைவி பெரியம்மாள்  ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்னல் தாக்கி பலியான பெரியம்மாளின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தார். இதனால் பெற்றோரை இழந்து பெரியம்மாளின் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.