பிரபல நகைக்கடையில் பயங்கர கொள்ளை.. சுவற்றில் ஓட்டை போட்டு 25 கிலோ தங்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்..!! 

 

பிரபல நகைக்கடை  ஜோஸ் ஆலுக்காஸில் 25 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்பய்டுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே, வசந்த் அன் கோ, பாரத் எலக்டிரானிக்ஸ் உள்ளிட்ட பிரபல கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற நிலையில், இன்று காலை  கடையைத் திறக்க வந்தனர். அப்போது, கடையின் சுவற்றில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் , உள்ளே சென்று பார்த்த போது, நகைக்கடையின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 25 கிலோ நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து  கோவை மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் கடையின் பின்புறம் ஊழியர்கள் சென்றுவரும் இடத்தில் இருந்த சுவற்றில் துளையிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் ஊழியர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கிடைக்கும் தகவலுக்குப் பிறகே, கடையில் இருந்து மாயமான நகைகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்பகுதியின் அருகிலேயே மின்சார வாரிய அலுலகம், ஏராளமான மருத்துவமனைகள், செல்போன் கடைகள், நகைக்கடைகள், திரையரங்குகள் ஆகியவையும் அமைந்துள்ளன.

காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர் , மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தடய அறிவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். நகைக் கடையில் திருடிய சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.