அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ,மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி... ராஜஸ்தானில் பரபரப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ-மாணவிகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டம் ரான்பூர் பகுதியில் உள்ள புண்ணிய தேவரியா அரசுப் பள்ளியில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் பூசணிக்காய் பொரியலைச் சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு, உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட 27 மாணவர்களில், 14 பேர் மேல் சிகிச்சைக்காகக் கோட்டாவில் உள்ள புது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநிலக் கல்வி அமைச்சர் மதன் திலாவர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கச் சிறப்புக் மருத்துவக் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வு அறிக்கை வந்த பிறகே உணவில் நச்சுத்தன்மை கலந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.