எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 எம்.எல்.ஏ.க்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவு!
தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவின் உட்கட்சி அரசியலில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அணியில் இருந்த 3 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் தற்பொழுது முகாம் மாறியுள்ளனர். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமார் மற்றும் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர் ஆகிய இருவரும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதேபோல், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ மோகன், எடப்பாடி பழனிசாமியின் மிக நெருங்கிய ஆதரவாளரான துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், அதிமுகவிற்குள் நிலவி வரும் இந்த முகாம் மாற்றம் சட்டமன்ற பலத்தை மாற்றியமைத்துள்ளது. இந்த 3 எம்.எல்.ஏ.க்களின் அதிரடி ஆதரவு மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 22-லிருந்து 25 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஆற்காடு சுகுமார் முதலமைச்சர் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு இபிஎஸ்-ஐச் சந்தித்த நிலையில், தற்பொழுது மேலும் இரு எம்.எல்.ஏ-க்களும் வேலுமணி அணியில் இருந்து விலகி ஈபிஎஸ் பக்கம் சாய்ந்திருப்பது அதிமுக மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.