பகீர் வீடியோ... 4 தலித் இளைஞர்கள் தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல்!!
இந்தியா முழுவதும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி தொடங்கி பொது இடங்களிலும் இந்த வன்முறை கலாச்சாரம் பெருகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆடு மற்றும் சில புறாக்கள் திருடு போனது. இதற்காக சந்தேகம் கொண்ட 6 பேர் கொண்ட கும்பல், 20 வயதுடைய 4 பட்டியல் சமூக இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர்.
ஸ்ரீராம்பூர் தாலுகாவில் உள்ள ஹரேகான் கிராமத்தில் நடந்த இந்த கொடூரச் சம்பவத்தில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அகமதுநகர் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. " ஸ்ரீராம்பூர் கிராமத்தில் ஆடு, புறாக்கள் திருடு போனதாக 20 வயதுடைய பட்டியல் சமூகத்தில் 4 இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்திச் சென்றுள்ளது. இதன் பின்னர், அவர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தியவர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த கொடூரச் செயலில் யுவராஜ் கலண்டே, மனோஜ் போடகே, பப்பு பார்கே, தீபக் கெய்க்வாட், துர்கேஷ் வைத்யா மற்றும் ராஜு போரேஜ் ஆகியோர் ஈடுபட்டதாக சந்தேகம் ஏற்பட்டது. ஆடு, புறாக்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அதே நேரத்தில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுபம் மகடே கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொலை முயற்சி , கடத்தல், வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆடு, புறாக்களைத் திருடியதாக பட்டியல் சமூக இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.