நெல்லையில் கோயில் திருவிழா தகராறில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை - 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மணிமுத்தாறு கால்வாய் வழியே சென்ற இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராம் (33) என்பவர் மணிமுத்தாறு கால்வாய் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
சமீபத்தில் நடைபெற்ற கீழ்தேவநல்லூர் கோயில் திருவிழாவின் போது இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதத்தின் காரணமாகப் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் இந்தத் துணிகரக் கொலை அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரமேஷ் ராமின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.