பண்ருட்டி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள்; தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் விஜய்!

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்த 4 ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவித் தொகையைத் தலா ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி, பண்ருட்டி அருகே வழக்கம்போல் தங்களது அன்றாட வேலைக்காகச் சென்ற தொழிலாளர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் சத்யா,செல்வராணி, காந்திமதி, ரவிச்சந்திரன் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது திடீர் மறைவு அவர்களது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொழிலாளர்களின் மரணம் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த விபத்தில் காயமடைந்த 8 பேருக்குச் சிறப்புச் சிகிச்சைகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இந்த நிதியுதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.