❤️ 22 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறிய கனவு! 45 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி தாய்!

 

 ஜம்முவைச் சேர்ந்த 45 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ். பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற இவர், கடந்த 2002-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். அப்போது கணிதப் பாடத்தில் தோல்வியடைந்ததால் அவரது கல்விப் பயணம் பாதியில் நின்றது.திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை நகர்ந்தாலும், எப்படியாவது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை அவர் கைவிடவில்லை.

 

ரேணுவின் கல்விக் கனவை நிறைவேற்ற அவரது மகன் நமன் கோல் உதவ முன்வந்தார். 12-ம் வகுப்பு படித்து வரும் நமன், சைகை மொழியை நன்கு அறிந்தவர்.பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை புரிய வைப்பதில் சவால்கள் இருந்தபோதிலும், தாயும் மகனும் தொடர்ந்து முயற்சி செய்தனர்.

 

ஜம்மு-காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்வை ரேணு எழுதினார்.கடந்த 10-ம் தேதி வெளியான தேர்வு முடிவில், 500-க்கு 410 மதிப்பெண்கள் பெற்று 82 சதவீதத்துடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 22 ஆண்டுகளாக மனதில் இருந்த தனது கல்விக் கனவை அவர் தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து நமன் கூறுகையில், தனது தாயின் சாதனை தனக்கு பெருமை அளிப்பதாகவும், அடுத்து அவர் 12-ம் வகுப்பு தேர்வையும் எழுத விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கும் தனது தாய்க்கு தொடர்ந்து கற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.முயற்சிக்கும் வயதுக்கு வரம்பில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதலும் விடாமுயற்சியும் இருந்தால் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்பதையும் ரேணு ஹான்ஸின் பயணம் எடுத்துக்காட்டுகிறது.